அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த போலி ஐஏஎஸ் அதிகாரி கைது... June 01, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடி போலீசிடம் சிக்கிய ஐஏஎஸ் போலி அலுவலர் கைது அரசு துணை செயலர் என கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக, தமிழகத்தில் பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் புளிக்காரத்தெருவைச் சேர்ந்த டெய்ஸி என்பவர் மருமகன், அரசு பணிக்கு முயற்சித்து வந்தார். இதற்கிடையில் டெய்ஸிக்கு, ஜார்ஜ் பிலிப் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. தனது மருமகன் அரசு பணிக்கு முயற்சிப்பது குறித்து ஜார்ஜ் பிலிப்பிடம் டெய்ஸி தெரிவித்தார். தனது நண்பர் ஒருவர் ஐஏஎஸ் அந்தஸ்தில், அரசு துணை செயலராக டிஎன்பிஎஸ்சி., யில் பதவி வகிப்பதாகவும், அவரிடம், உயர் பதவிக்கேற்ப பணம் கொடுத்தால் அரசு பணி எளிதாக பெற்று விடலாம் என ஜார்ஜ் பிலிப் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து டெய்ஸி மருமகன் உள்பட 3 பேருக்கு அரசு பணிக்காக ரூ.15 லட்சத்தை ஜார்ஜ் பிலிப் பெற்றுக்கொண்டார். பணத்தை வாங்கிய பின் அரசு பணி பெற்றுத்தராமல் ஜார்ஜ் பிலிப் தாமதித்து வந்தார்..இது குறித்து டெய்ஸி கேட்டபோது, தங்களிடம் வாங்கிய பணத்தை சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் (எ) நாவப்பனிடம் கொடுத்து விட்டதாக அலட்சியமாக ஜார்ஜ் பிலிப் பதில் அளித்தார். இதில் சந்தேகமடைந்த டெய்ஸி, இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் புகார் அளித்தார். எஸ்பி., அறிவுறுத்தல்படி, சென்னையைச் சேர்ந்த ஜார்ஜ் பிலிப், பிரகாஷ் (எ) நாவப்பன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். தனிப்படையினர் விசாரணையில், அரசு பணிக்கு பலரிடம் தனது புரோக்கர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்ட ஏ.பிரகாஷ், டிஎன்பிஎஸ்சி அரசு துணை செயலர் என்ற பெயரிலும், கே.நாவப்பன் எரிசக்தி துறை , அரசு துணை செயலர் என மற்றொரு பெயரிலும் தமிழக அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர் பேடு தயாரித்து பல்வேறு துறை அரசு அதிகாரிகளுக்கு நாவப்பன் கொடுத்த வேலைக்கான பரிந்துரை, நியமன கடிதம் அசல் போல் இருந்தது. இக்கடிதத்தை பணம் கொடுத்தோர் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறையை அணுகிய போது அது போலி கடிதம் என ஏமாற்றமடைந்தோர் மூலம் தெரிந்தது. ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி என கூறிய இவரிடம் மதுரை, திருச்சி சென்னை உள்பட தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் அரசு பணிக்கு பணம் கொடுத்து ஏமாறியதும் தெரியவந்துள்ளது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோ ஆதாரங்கள் தனிப்படையினரிடம் சிக்கியுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கூறியதாவது: அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாறியோர் அளித்த புகாரில் வழக்கு பதிந்து விசாரித்தபோது, அரசு வாங்கித் தருவதாக பணம் பெற்ற நாவப்பனை சென்னை போலீசார் ஏற்கனவே கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவந்த நாவப் பன், இரண்டு மாதம் கழித்து மீண்டும் தனது ஏமாற்று வேலையை தொடங்கிய நாவப் பனை புகாரின் அடிப்படையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம் என்றார்.