கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு முற்றுகையிட்ட பொதுமக்கள்...
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் ஆப்பரேட்டர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி கலந்துகொண்டு 550 நபர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது வட்டார வளர்ச்சி அலுவலத்திறக்கு பின்புறம் உள்ள பாரத கோயில் தெரு, அம்பேத்கார் நகர் , இருளர் காலனி போன்ற பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பகுதிக்கு கடந்த ஒரு வருடமாக முறையான குடிநீர் வசதி இல்லாத சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். பல முறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இரண்டு முறை சாலை மறியல் செய்தும் இதுவரையிலும் எந்த பயனும் இல்லை என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் எங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டுச் செல்லமாட்டோம் என கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கும் நேரத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அரசு அலுவலகம் எதிரே கூடியதாலும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்த சம்பவம் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...