வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே... இந்தியாவில் டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் யார்...
இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் இந்தியப்பெண் யார்? சட்டசபையில் அங்கம்வகித்த முதல் இந்தியப்பெண் யார்? இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை ஒருவரே. அவர் ஒரு தமிழ்ப்பெண். அவர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்.
சமூக சீர்திருத்தவாதியாகவும், அஞ்சாநெஞ்சம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர். பெண்கள் அடிமைகளாக வாழ்ந்த காலத்தில், புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர். புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-இல் இவர் பிறந்தார். இவரது தந்தை நாராயணசாமி. தாய் சந்திரம்மாள். இவர் தந்தை, புதுக்கோட்டையில் மகாராஜா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு நான்கு வயதானபோது, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். இவருக்கு 10 வயதானபோது, படிப்பை நிறுத்த நினைத்தனர். ஆனால் முத்துலட்சுமி நன்றாகப் படித்ததால், தொடர்ந்து படிக்க வையுங்கள் என ஆசிரியர்கள் சிபாரிசு செய்யவே, உயர்நிலை பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார்.
மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய 100 பேரில், பத்துபேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களில் ஒரே மாணவி, அதிலும் முதல் மாணவி என்ற பெருமை பெற்றார் முத்துலட்சுமி. அதனால் தொடர்ந்து அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க, பெற்றோர் தடை செய்யவில்லை.
தனது 20 ஆவது வயதில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் பயின்றார். மருத்துவக் கல்லூரியில் சேரும்போது, புதியதான அந்தச் சூழ்நிலையால் பயந்திருந்த முத்துலட்சுமி வெகுவிரைவில் பயத்திலிருந்து மீண்டு, படிப்பில் முன்னேறுவதில் கவனம் செலுத்தினார். அறுவை சிகிச்சை தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுத் தேறினார். மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
1912-ஆம் ஆண்டு முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு.
டாக்டர் முத்துலட்சுமிக்குத் 1914-இல் திருமணம் ஆனது. இவர் கணவர் டி.சுந்தரரெட்டி. இவரது ஆற்றலை அறிந்த அரசாங்கம் பெண்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான விசேஷ பயிற்சி பெற, உபகாரச் சம்பளம் கொடுத்து இவரை இங்கிலாந்துக்கு அனுப்பியது. அங்கு 11 மாதம் தங்கி உயர் பயிற்சி பெற்றார். பின்னர் இந்தியா வந்த அவர், அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார். 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுகளில் சில புரட்சியான சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பால்ய விவாகம் தடை செய்யும் சட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
அனாதைக் குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க நினைத்தார். இதற்கு அடையாறில் அவ்வை இல்லம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தை உருவாக்கினார் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார். இதற்கு ஏராளமான பொருள் உதவி தேவைப்பட்டது. எனவே நிதி வசூல் செய்து கொண்டிருந்தார். கருணை உள்ளம் கொண்ட சிலர் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.அம்மையாரும் அயராமல் தினமும் பலரைத் தேடிச் சென்று உதவி பெறுவதற்கு முயற்சி செய்து வந்தார்.
சிலர் தங்களால் ஆன உதவிகளைச் செய்வார்கள். பலர் அவரை எரிந்து விழுவார்கள். அதற்கெல்லாம் அவர் அயர மாட்டார். ஒருமுறை அவர் ஒரு பணக்காரரிடம் சென்று, இல்லத்தின் செலவுகளுக்காக நிதி கேட்டார். அவரது வீட்டு வாசலில் ஒரு பூசணிக்காய் இருந்தது. அம்மையார் பணத்திற்காக வந்தது பணக்காரருக்கு எரிச்சலாக இருந்தது."என்னிடம் பணம் இல்லை.வேண்டுமென்றால் இந்தப் பூசணிக்காயை எடுத்துக் கொண்டு போங்க"என்று அலட்சியமும், கிண்டலுமாக அந்தப் பூசணிக்காயை உருட்டிவிட்டார்.
அம்மையார் வருத்தப்படவில்லை. புன்சிரிப்புடன் அந்தப் பூசணிக்காயை எடுத்துத் தன் தலை மீது வைத்துக் கொண்டார்."ரொம்ப சந்தோசம். நன்றி. ஒன்றுமில்லை என்று சொல்லாமல் இதையாவது கொடுத்தீங்களே. என்று பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை பாருங்கள்..