கொரோனா வைரஸ் பற்றி ராகுல் காந்தி கருத்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பதிலடி..
புதுடெல்லி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுகாதார அவசர காலத்தில் நாடு ஒன்றிணைந்து நிற்கிறது என்று கூறிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், ஆனால் ராகுல் காந்தி தொடர்ந்து சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்றார்.
ராகுல் காந்தி மீதான எதிர் தாக்குதலில், ஹர்ஷவர்தன் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளில், இந்தியா அனைத்து தடைகளையும் அப்புறப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது! முக்கியமான சுகாதார அவசரநிலையில் தேசம் ஒன்றாக நிற்கிறது.
கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய். ஆனால், ராகுல் காந்தி ஜி தொடர்ந்து தனது சிறுபிள்ளைத்தனமான அரசியலை விளையாடி மக்களை சோர்வடையச் செய்கிறார். நான் ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு ஷர்மாவுடன் பேசும் இந்த வீடியோவை பாருங்கள்.” என்று கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்திய பொருளாதாரத்தின் நிலைமையை அனைவரும் பார்க்க முடிகிறது. இந்தியாவின் பலமே அதன் பொருளாதாரம் தான். நரேந்திர மோடியின் சித்தாந்தமும் கொள்கைகளும் அதை அழித்துவிட்டன. கொரோனா வைரஸின் பிரச்சினை மிகவும் தீவிரமானது, ஆனால் அரசாங்கம் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்தி- கோவி.சரவணன்...