டிஎன்பிஎஸ்சி ஊழியர்களுக்கு அடுத்த தலைவலி… சொத்துகளை கணக்கெடுக்க அரசு முடிவு.
முறைகேடுக்கு துணை போனதாக கருதப்படும் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களின் சொத்து விவரங்களை கணக்கெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இது, ஊழியர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்திய குருப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்து வெளிச்சத்துக்கு வந்தது. இது, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தன்னாட்சி அமைப்பாக செயல்படும் தேர்வாணையம் மீது அடுக்கடுக்கான புகார்கள் வரத்தொடங்கி உள்ளது.
குரூப்-4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து குரூப்-2ஏ தேர்வில் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இத்தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். குரூப் 2 ஏ முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட காவலர் சித்தாண்டி தலைமறைவாக இருந்த நிலையில் அவரும், அவரது சகோதரர் வேல்முருகன் மற்றும் உறவினர் ஜெயராணி ஆகியோரும் சிக்கியுள்ளனர்.
அதிகாரிகளும் இடைத்தரகர்களும் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. முறைகேட்டுக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டது யார் யார் என்பதை கண்டுபிடிக்க, தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்வாணையம் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க, கடும் நடவடிக்கை எடுப்பது என்றும் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மோசடி பேர்வழிகளுக்கு பின்னால் உள்ள டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் அடையாளம் காணும்பணி தொடங்கியுள்ளது. இதற்காக, சந்தேக வளையத்தில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள், அலுவலர்கள் சிலரின் வருமானம் மற்றும் சொத்து கணக்கையும் சரிபார்க்க அரசு முடிவு செய்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களின் தற்போதைய சொத்து மதிப்பு, பணிக்கு சேரும் முன்பு இருந்த சொத்துக்களின் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இது, முறைகேடுக்கு துணை போன டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்
tamilsudarr.page.
செய்தி- சிறப்பு செய்தியாளர்.