பொள்ளாச்சியில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது..
தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தலைமறைவாகி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த காட்டம்பட்டி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் ஒரு சில மாணவ மாணவிகள் கடந்த வாரம் தங்களது பெற்றோரிடம் பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர் மாகாளியப்பன் தகாத முறையில் நடந்துகொள்வதாக அழுதுகொண்டே கூறினர்.
தொடர்ந்து பெற்றோர்கள் மற்ற மாணவிகளின் பெற்றோர்களிடம் பேசிய பொழுது அந்த மாணவிகளும் தங்களது பெற்றோர்களிடம் இதேபோன்றதொரு புகாரை கூறி இருப்பதாக தெரிவித்தனர். பள்ளியில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 மாணவிகள் இடம் அந்த ஆசிரியர் இவ்வாறு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது . ஆசிரியர் மன்னிப்பு கேட்டதால் இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் பெற்றோர்கள் விட்டு விட்டனர்.
இந்த தகவல் அதே பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கும் தெரிய வர இதுபற்றி சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த வியாழக்கிழமை ஒன்று கூடி முடிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை அப்பகுதி மக்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். புகார் அளித்தால் மட்டுமே தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர் .
புகார் அளிக்க எந்த பெற்றோரும் முன்வராத நிலையில் ஜனநாயக மாதர் சங்கம் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்பினர் கோவை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே அந்த தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அலுவலர் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் யாரும் புகார் அளிக்க முன் வராத நிலையில் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நேற்று மாலை நெகமம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமையாசிரியர் மாகாளியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார் . இந்த புகாரின் பேரில் தலைமையாசிரியர் மாகாளியம்மன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டத்தில் தலைமையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது கல்வித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர் ஆன்லைனில்..
செய்தி- சிறப்பு செய்தியாளர்...