சென்னை:
தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னையை சேர்த்து மொத்தம் 10 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது.
91,975 ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் முதல்கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.தமிழகம் முழுவதிலும் உள்ள 315 மையங்களில் இந்த வாக்குப்பெட்டிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.8 ரவுண்டுகளாக ஓட்டுகள் எண்ணும் பணி நடக்கும். ஓட்டுகளை பிரிக்கும் பணியே இன்று பிற்பகல் 1 மணிக்கு மேல் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. ஓட்டுகள் எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, வீடியோவிலும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.