ஆம்பூர் அருகே காலணி உதரிபாகங்கள் சேகரித்து வைக்கப்படும் குடோனில் தீ விபத்து.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காலணி உதிரி பாகங்களை சேகரித்து வைத்திருந்த குடோன் செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல, இந்த குடோனை ஊழியர்கள் மூடிவிட்டுச் சென்ற நிலையில், நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உதிரி பாகங்கள் என்பதால், தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கதினர் உடனடியாக ஆம்பூரில் உள்ள தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது தீடீரென எதிர்பாராத விதமாக தீயணைப்பு வாகனம் பழுதாகி நின்றது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த வாகனத்தை தள்ளிச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தினர். இதனை தொடர்ந்து அருகில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்கள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் போராடினர். பின்னர், ஒரு வழியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் காலணி தயாரிக்க பயன்படும் ஷீலேஸ், காலணி உதிரி பாகங்கள், இரசாயனங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரித்து நாசமானது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வந்தும் தீயணைப்பு வாகனம் பழுது அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.