திருச்சி அருகே ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் காளையர்கள் தேர்வு.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளம் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 26 ம் தேதி ஜல்லிகட்டுப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக புனித இன்னாசியார் திடலில் விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு குழு சார்பில் கடந்த 18 ம் தேதி கால்கோல் நடப்பட்டது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் திடலில் வாடிவாசல், பந்தல், பேரிகாட் அமைக்கும் பணி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இதனை தொடர்ந்து புனித இன்னாசியார் திடலில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாடுகளுக்கு நேற்று டோக்கன் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட மாடுகளுக்கு இன்று வழங்குகின்றனர். தொடர்ந்து நாளை 23 ம் தேதி மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
பின்பு வரும் சனிக்கிழமை 25 ம் தேதி மாலை பொங்கல் விழா மற்றும் இரவு 10 மணிக்கு வாணவேடிக்கையுடன் புனித வனத்து அந்தோணியார் தேர்பவனி நடைபெறுகிறது. பின்னர் மறுநாள் காலை 26 ம் தேதி ஞாயிற்று கிழமை ஜல்லிகட்டுப்போட்டி நடைபெறவுள்ளது.