புதுக்கோட்டையில் பெரும்பான்மை இருந்தும் தலைவர் பதவியை கோட்டைவிட்ட திமுக. தட்டிச் சென்ற அதிமுக.
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்தம் 22 உறுப்பினர்கள். இதில், 11 உறுப்பினர்களை திமுகவும், 2 உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சியும், 8 உறுப்பினர்களை அதிமுகவும், ஒரு உறுப்பினரை தமிழ் மாநில காங்கிரஸும் பெற்றன.திமுக அணியில் மொத்தம் 13 பேர் இருந்தனர். அதிமுக அணியில் 9 பேர் மட்டுமே இருந்தனர்.இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில் தலைவர் தேர்வுக்கான மறைமுகத் தேர்தல் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தேர்தல் நடத்தும் அலுவலராகச் செயல்பட்டார்.
திமுக சார்பில் 17ஆவது வார்டு உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியனும், அதிமுக சார்பில் 8ஆவது வார்டு உறுப்பினர் த. ஜெயலட்சுமியும் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை அளித்தனர். இதையடுத்து வாக்குச்சீட்டு தயாரிக்கப்பட்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அதிமுக உறுப்பினர் த. ஜெயலட்சுமி 12 வாக்குகளைப் பெற்று தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பெரும்பான்மையைக் கொண்டிருந்த திமுக உறுப்பினர் கலைவாணி சுப்பிரமணியன் 10 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். திமுக உறுப்பினர்கள் மட்டுமே 11 பேர் இருந்தும், தலைவர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் ஒன்று குறைந்து 10 வாக்குகளைப் பெற்றது புதுக்கோட்டையில் திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வாக்குகளை திமுக அணியில் இருந்து கூடுதலாக அதிமுக வேட்பாளர் கைப்பற்றியிருக்கிறார். இது அதிமுகவின் அரசியல் ராஜதந்திரம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.