உள்ளாட்சி தேர்தலில் 7 மாவட்டத்தையும் கைப்பற்ற வேண்டும்: அதிமுக - பாமக மாஸ்டர் பிளான்.
தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் ஆளும் அதிமுகவை விட திமுகவே அதிக இடங்களை கைப்பற்றியது. எனினும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு நடந்த மறைமுக தேர்தல்களில், அதிமுகவே அதிக இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த 9 மாவட்டங்களில், திருநெல்வேலி, தென்காசியை தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்கள், பாமக வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ள மாவட்டங்கள் ஆகும். எனவே, இதில் ஒரு மாவட்டத்தில் கூட தோற்கக்கூடாது என்று பாமகவை, அதிமுக அறிவுறுத்தி உள்ளது. அதில் பாமகவும் உறுதியாக உள்ளது.
மேலும், தேர்தல் அறிவிப்புக்கு முன்னர், அந்தந்த மாவட்டங்களில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்காக, அரசு சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில், பாமக காட்டிய வேகத்தை, ஏழு மாவட்ட உள்ளாட்சி தேர்தல்களிலும் காட்ட வேண்டும் என்றும் தமது தொண்டர்களுக்கு பாமக வலியுறுத்தி உள்ளது. இந்த ஏழு மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம், பாமகவுக்கு உள்ளாட்சிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படுவதுடன், கூடுதல் பொறுப்புக்களும் வழங்கப்படும் என்பதால், பாமகவினரும் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும், உள்ளாட்சியின் பல முக்கிய பொறுப்புக்கள், இஸ்லாமிய சமூகத்தினருக்கு வழங்குவதையும் அதிமுக முக்கிய இலக்காக கொண்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில், மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் போன்ற பதவிகளில், தங்களுக்கு ஒரு பொறுப்பு கூட திமுக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தங்களது ஆயுதமாக பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் உங்க தமிழ் சுடர் ஆன்லைனில்...