திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சினை, மறைமுகத் தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வந்தது. தி.மு.க., கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். மறைமுகத் தேர்தலிலும் தி.மு.க.வை விட கூடுதல் இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.
அதாவது, மறைமுக வாக்கெடுப்பின்போது, தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. இது தி.மு.க. தலைமையை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், முதலில் தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம், காங்கிரஸ் தலைமை மீது தி.மு.க. அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
இதற்கிடையே, கட்சித் தலைமை கே.எஸ்.அழகிரியை கண்டித்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் திடீரென அவசர அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் வேலூர் மாவட்ட திமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிப் போனால் போகட்டும். எங்களுக்கு என்ன நஷ்டம்? கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதால் அது வாக்கு வங்கியை பாதிக்காது என்று கூறியுள்ளார். துரைமுருகனின் இந்த கருத்தால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.