வேலூர் அருகே பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் ( வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்) இவரது மகள் நிவேதினி(14) கே.வி.குப்பம் அடுத்த சென்னாங்குப்பத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை மாணவி நிவேதினி பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்ததாக கூறி கே.வி.குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்து மாணவி மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவி உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் மாணவியின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் கே.வி.குப்பம் காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தனியார் பள்ளி நிர்வாகம் (வித்யா லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சென்னாங்குப்பம்) தரப்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது. மாணவி நிவேதினி 7-ம் வகுப்பு படிக்கும் போதே வலிப்பு ஏற்பட்டதாகவும். இந்நிலையில் நேற்று மாலை திடீரென மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக கே.வி.குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம் பின்னர் அவர்கள் மாணவியை மேல் சிகிச்சைக்காக வேலூர் அழைத்து சென்றனர் என கூறினர்.
மாணவியின் பெற்றோர் தரப்பில் கேட்டபோது. தங்களது மகள் வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமைதிக்கப்பட்டுள்ளதாக பள்ளியில் இருந்து தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து சென்ற நாங்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் கொண்டு சென்ற போது எங்களது மகள் உயிரிழந்துவிட்டதாக கூறினர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே எங்களது மகள் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என கூறினர்.