குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பற்றி பேசுகையில் அமித்ஷா சோலியை முடிக்க வேண்டும் என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரலானது.
இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் மூன்று பிரிவின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நெல்லை கண்ணன் தீடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை பாஜகவினர் தடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அதன்பின் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு பாஜகவினர் 100க்கும் மேற்கொண்டவர்கள் முற்றுகையிட்டு உடனடியாக கைது செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை பற்றி அவதூறாக பேசிய நெல்லைக்கண்ணன் திடீரென மருத்துவமனையில் அனுமதி. நெல்லையில் பரபரப்பு.