வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரை சேர்ந்த "சக்சஸ்" திரைப்பட குழுவினரின் பத்தாவது குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆசிரியர்.சதாசிவம் தலைமை தாங்கினார்.மிட்டாளம் மனோகரன் அனைவரையும் வரவேற்றார். கலைமாமணி ஜூடோ ரத்தினம் "எதிரேற்றல்" என்ற குறும் படத்தை வெளியிட்டார். கவிஞரும் ஆசிரியருமான கௌதம பாண்டியன் அதை பெற்றுக் கொண்டார்.
குறும் படத்தை வெளியிட்டு திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கலைமாமணி ஜூடோ ரத்தினம் கூறுகையில் " மது ,புகையிலை போன்றவற்றால் இன்றைய இளைஞர் சமுதாயம் சீர்கெட்டு வருகிறது என்பதை இந்தக் குறும்படம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. அதேசமயம் மனித மூளையை மட்டும் பயன்படுத்தி செயல்களில் ஈடுபடாமல் அனைத்தையும் இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொள்ள முடியும் என்ற கருத்தும் தவறானது என்பதை இப்படத்தில் கருத்துக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
நமது குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இதுபோன்ற இன்னும் விழிப்புணர்வு ஏற்படத்தக்கூடிய குறும்படங்களை தயாரிக்க வேண்டும். இந்த குறும்படங்களின் மூலம் சமுதாயத்திற்கு பல்வேறு நல்ல கருத்துக்களை கூற வேண்டும்.
நமது பகுதி இளைஞர்கள் இனிவரும் காலங்களில் பல்வேறு துறைகளில் சாதனை புரிய வேண்டும்" எனக் கூறினார்.
இந்த குறும்பட வெளியீட்டு விழாவில் குறும்பட இயக்குனர் கிருபா சந்திரசேகரன், தளபதி ரிஷி ,அன்பில் பாஸ்ரதன் ,இளவரசன், புன்னகை புயல் திருமலை, பிரம்மோ உதய் , பிரேம்குமார், சதீஷ்குமார் ,விஜய், ஜெகன் ,லோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக திருமால் நன்றி கூறினார்.