திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட சிம்மணபுதூர் ஊராட்சி புலவர் வலசை பகுதியை சேர்ந்தவர் சின்ன குட்டி என்கிற சர்வேஸ்(60) என்பவர் கட்டுமானப்பணியில் கம்பி கட்டும் பணி செய்து வருகிறார். இவருடைய மனைவி பொன்னம்மாள்(50) இன்று அதிகாலை 5 மணி அளவில் அதே பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி நூதன போரட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் பொன்னம்மாளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் இதில் உடன்படாத பொன்னம்மாள் என்னுடைய கோரிக்கை நிறைவேற வில்லை என்றால் நான் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என ஆவேசமாக கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் மஞ்சுநாத் மற்றும் காவலர்கள் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது போராட்டத்தில் ஈடுபட்ட பொன்னம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய பொன்னம்மாள் எனது கணவர் எங்கள் வீட்டிற்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல். என்னையும் எனது குழந்தைகளையும் கண்டுகொள்ளாமல் மதுபோதைக்கு ஆளாகி குடும்பத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து பலமுறை நான் அவரிடம் முறை முறையிட்டேன். ஆனால் அவர் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் எப்பொழுதும் மது போதைக்கு அடிமையாகி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை கண்டித்து நான் இன்று குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஏறி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன் என தெரிவித்தார். அதன்பின் காவலர்கள் அவரை சமரசம் செய்து பத்திரமாக மீட்டு கீழே கொண்டுவந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை வேளையில் பெண் ஒருவர் குடிநீர் மேல்நிலை தொட்டி மீது ஏறி நூதன முறையில் போராட்டம் செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் 50 வயது பெண் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நூதன போராட்டம். போலிசார் சமரசம்.