பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டும் அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் 1,000 ரூபாயுடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 26-ந் தேதி அறிவித்தார்.
இந்த பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 29-ந் தேதி சென்னை கோட்டையில் நடைபெற்ற விழாவில் அவர் தொடங்கி வைத்தார்.
இதனிடையே இது தொடர்பான வழக்கு நேற்று ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு இப்போது வழங்கப்படாது என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பொங்கல் பரிசு தேர்தலுக்கு பின்னர் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த அலமேலு என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு இப்போது வழங்கப்படாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது வாய்மொழி உத்தரவாக மட்டுமே இருப்பதால் உரிய உத்தரவுகள் பிறப்பித்து நீதிமன்றத்தில் உத்தரவு நகலை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்குவது மறைமுகமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வகை செய்யும் என்பதால் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னரே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த மனுவினை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
பொங்கல் பரிசு தரக்கூடாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் ஆணையம் தகவல் தெரிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு வழங்க தடை கோரிய வழக்கை ஜனவரி 10-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.